1.

மிலான் குந்தேராவுக்கு இப்போது 90 வயதுக்கு மேலாகிவிட்டது. அன்றைய செக்கோஸ்லாவாக்கியாவில் (1929) பிறந்த குந்தேரா அவரது தாய்நாடு ஒரு நூற்றாண்டில் சென்று வந்த பல மாற்றங்களைப் பார்த்திருக்கின்றார். முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள், செக்கில் பிரசித்தபெற்ற புரட்சியான ‘ப்ராக் வசந்தம்’,  அதன் பின்னர் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் செக்கின் மீது ஆக்கிரமிப்பு என்று பல சடுதியான மாற்றங்களில் குந்தேராவின் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஓர் இடதுசாரியாக இருந்த குந்தேராவினால் சோவியத் ஒன்றியம், செக்கின் மீது டாங்கிகள் கொண்டு நடத்திய ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்த எதிர்ப்பை, அது ஏற்படுத்திய பாதிப்பைப் பல்வேறுவிதங்களில் குந்தேராவின் படைப்புக்களில் நாம் அவதானிக்கமுடியும்.

குந்தேரா, அவரது நாற்பதுகளில் பிரான்சிற்கு குடிபெயர்ந்து பின்னர் கிட்டத்தட்ட பிரெஞ்சுவாசியாகவே ஆகிவிட்டார். அவரிடம் ஓரிடத்தில், தாய்நிலம் பிரிந்து வந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள் எனக் கேட்டபோது, ‘உலக மகாயுத்தங்களின்போது ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பலருக்கு திரும்பவும் ஜேர்மனிக்குப் போகும் கனவுகள் இருந்தன. எனவே அவர்கள் அதையொரு தற்காலிக புலம்பெயர்வாகவே நினைத்திருந்தனர். தனக்கு அப்படி இல்லை. பிரான்ஸிற்கு வந்தபோது அது தனது (புதிய) தாய்நிலம் என்றே நினைத்திருந்தேன். ஒருபோதும் செக்கிற்குத் திரும்பிப் போகும் கனவு தனக்கு இருந்ததில்லை’ என்கின்றார். ஒருகாலத்தில் மேற்கின் பகுதியாக இருந்த செக், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின் கிழக்கின் பகுதியாகவே மாறிவிட்டதென்கின்றார். தன்னை மேற்கின் கலாசார வழி வந்த ஒருவனாக நினைத்துக் கொள்வதால் இன்று ‘கிழக்கின் பேரரசனாக’ இருக்கும் செக் தன்னைக் கவர்வதில்லை என்கின்றார். இதை நாம் குந்தேராவின் Ignorance நாவலில், செக்கைப் பிரிந்துவந்த ஒரு பெண் இருபது ஆண்டுகளின் பின் தாய்நிலம் திரும்பிச்சென்று தோல்வியுடன் திரும்பி வரும் அபத்தத்தினூடாக நாம் அவதானிக்க முடியும்.

குந்தேரா, இதுவரை பத்து நாவல்களை அவரது தாய்மொழியான செக்கிலும், பின்னர் அவரின்  புலம்பெயர்ந்த புதிய நிலப்பரப்பு மொழியான பிரெஞ்சிலும் எழுதியிருக்கின்றார். அவரது ஒரேயொரு (ஆங்கிலத்தில் வெளிவந்த) சிறுகதைத் தொகுப்பான ‘Laughable Love’ அவரது நாவல்களைப் போல மிகவும் பேசப்பட்ட ஒரு தொகுப்பாகும். அதில்தான் அவரது பிரசித்தி பெற்ற கதையான ‘The Hitchhiking Game’ வெளிவந்தது.

மிலேன் குந்தேராவுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் காஃப்கா பிடித்த எழுத்தாளர்.  செக் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னும், உங்களுக்கு யாரேனும் ரஷ்ய எழுத்தாளர்கள் பிடிக்குமாவென ஒரு நேர்காணலில் கேட்கப்படும்போது, லியோ தால்ஸ்தோய் தனக்குப் பிடித்த எழுத்தாளர் என்கின்றார். தாஸ்தவேஸ்கியை விட தால்ஸ்தோய் நவீனகாலத்து எழுத்தாளர் என்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸில்ன் ‘யுலிஸஸின்’ கட்டுப்பாடற்ற தன்னுரைக்கு (monologue) முன்னோடி, தால்ஸ்தோயின் ‘அன்னா கரீனா’ என்கின்றார். அன்னா கரீனா இறுதியில் பேசும் தன்னுரை உண்மையில் அசல் பிரதியில் கட்டுபாட்டற்ற தன்மையுடனும், பகுத்தறிவுக்கு(irrational) அப்பாற்பட்டு இருக்கின்றதென்றும், அதை பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் இயல்புகெட்டு தர்க்கத்துக்கு உட்பட்ட தன்னுரையாக அன்னாவின் மனோநிலை மாற்றப்பட்டு வந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அசல் மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்கள் அப்படியே அந்தக் கட்டுப்பட்டில்லாத தன்னுரையை பிரெஞ்சுமொழிக்கு மாற்றினால், இவர்களுக்கு மொழிபெயர்க்கத்தெரியாது என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தினால் அப்படிச் செய்திருக்கலாம் எனச் சொல்லும் மிலேன் குந்தேரா, ஆனால் அதை அதன் இயல்பிலேயே கட்டுப்பாடற்றதன்மையோடு, தர்க்கமில்லாது மொழிபெயர்த்திருக்கவேண்டும் எனச் சொல்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ, மிலான் குந்தேரா தனது படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களில் மிகவும் நுணுக்கமாகப் பார்த்துத் திருத்தங்களை நிறையச் செய்கின்றவர் எனவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று எழுத்தாளர்கள் என்பவர்கள் அவர்களின் படைப்புக்களைத் தவிர்த்து, வெளியே தெரியத் தேவையில்லை என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டவர். முக்கியமாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் பிறருக்குத் தெரியவேண்டியதில்லை என்றும் கூறியவர் (இதை வலியுறுத்திய இன்னொருவர் ழாக் தெரிதா). இதனால் பொதுநிகழ்வுகளில் பங்குபெறவோ, தனது புத்தக வெளியீடுகளில் கலந்துகொள்ளவோ மறுத்ததோடு, புகைப்படங்களை வெளியிடவோ, நேர்காணலைக் கொடுக்கவோ தயங்கிய ஒருவராக இருக்கின்றார் மிலான் குந்தேரா.

 

2.

The Unbearable Lightness of Being

மிலான் குந்தேராவின் The Unbearable Lightness of Being மனித வாழ்வின் இருத்தலின் மீதும் குடும்பம் என்ற அமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது. மூளை சத்திரசிகிச்சை நிபுணனாக இருக்கும் நாயகன் தோமஸ், ஒரு பெண் பித்தனாக (womanizer) இருக்கின்றான். அவனது வாழ்வும் தெரேஸா, சபீனா என்ற இரு பெண்களைச் சுற்றியே நகர்கின்றது. பெண்களோடு உடலுறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் தெளிவான எல்லைகள் இருக்கின்றதென நினைத்து வாழ்வை அதன்பாட்டில் கொண்டாடிக்கொண்டிருப்பவன்.

அவனது பெண்பித்து நிலைமையைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்கின்ற தெரேஸாவிற்கு திருமணத்தின்பின்னும் தோமஸ் ஒரு பெண் பித்தனாக இருப்பதை அறிந்து உளவியல்ரீதியில் சிதைவிற்குள்ளாகின்றார். பின்னாட்களில் ரஷ்யா(சோவியத் ஒன்றியம்) செக்கோசிலாவாக்கியா (பின்னாட்களில் செக்- ஸ்லாவாக்கியா) நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது, சுதந்திரத்தை/உயிரைத் தக்கவைப்பதற்காய் சுவிஸிற்கு தோமஸும், தெரேஸாவும் தப்பியோடுகின்றார்கள் (அமெரிக்காவாயிருந்தாலென்ன, ரஷ்யாவாயிருந்தாலென்ன, இந்தியாவாயிருந்தாலென்ன அயல் நாடுகளில் மீது ஆக்கிரமிப்புச் செய்வதும், அந்நாடுகளில் கலாசாரங்களைச் சிதைப்பதும் அளவுகளில் அவ்வளவு வேறுபடுவதில்லை).

செக்கில் இருந்தபோது ஒரு சுயாதீனப்புகைப்படப்பிடிப்பாளராய் இருந்த தெரேஸாவுக்கு, தொழில் தேடி சுவிஸில் அலையும்போது தோட்டங்களையும்/நிர்வாணப்படங்களையும் எடுத்தால் மட்டுமே பிரசுரிப்போம் என்கின்ற சுவிஸ் பத்திரிகைத் தொழில் வெறுக்கின்றது. மேலும் சுவிஸ் வந்தும், தோமஸ் பெண்பித்தனாக அலைவதைப் பார்த்து சோர்வு வந்து, தேரேஸா மீண்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருக்கும் செக்கிற்கு திரும்பிச்செல்கின்றார்.

ஏன் திரும்பிப்போகின்றாய் எனக் கேட்கப்படும்போது, செக்கில் தோமஸ் ஒரு பெண்பித்தனாக இருந்தபோதும் தான் தனித்தியங்க முடிந்திருந்தது. எனக்கு அவனது அன்பு மட்டுமே அப்போது போதுமானதாயிருந்தது. இப்போது எல்லாவற்றின் நிமித்தமும் தோமஸைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனக்கு வேண்டியது அவனது அன்பு மட்டுமே, நான் தனித்தியங்கவே விரும்புகின்றேன் என்று தெரேஸா கூறுகின்றார்.

பெண் பித்தனாக தோம்ஸ இருந்தாலும், அவனுக்கு பிற உறவுகள் உடலுறவுக்காய்த் தேவைப்படுகின்றதே தவிர, நேசத்திற்கு எனப் பார்க்கும்போது அவனது தேர்வு தெரேஸாவாகவே இருக்கின்றது. தெரேஸாவோடான அன்பு அவனளவில் உணமையானது, அதை வேறு எவரும் ஈடுசெய்யவும் முடியாது. தெரேஸா செக்கிற்கு மீண்டும் போனதை அறிந்த தோமஸும் செக்கிற்குள் மீண்டும் நுழைகின்றான். சில அரசியல் காரணங்களால் மீண்டும் வைத்திய நிபுணராய் தொழில் செய்யமுடியாது கட்டடவேலை/வர்ணம் பூசுதல் என்பவற்றைத் தோமஸ் செய்துவருகின்றான்.

தெரேஸாவாலும் தான் முன்பு பணியாற்றிவந்த பத்திரிகையில் இயங்க முடியவில்லை. ஆரம்பத்தில் செய்துவந்த மதுபானப் பணியாளர் (bartender) வேலையைத்தான் செய்கின்றார் இதற்கிடையில் தோமஸ் மீண்டும் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடுவதை அறிந்து கோபத்தில் -ரஷ்ய உளவாளி என நம்பப்படுகின்ற- ஒருவரிடம் தன்னைத் தெரேஸா இழக்கின்றார். ஓர் இரவில் தனியே அந்த ஆடவனின் வீட்டிற்குப்போகும் தேரேஸாவை, அந்த நபர் உடலுறவுக்கு அழைக்க தான் அதற்காய் வரவில்லையென மறுக்கின்ற தெரேஸா, பிறகு தோமஸின் மீதிருக்கும் கோபத்தில் ரஸ்யரோடு இணங்கிப்போகின்றார். எனினும் அந்த உடலுறவு ஒரு பாலியல் வன்முறையைப் போலவே தெரேஸாவுக்குத் தெரிகின்றது.

இறுதியில் தான் முழுமையாக நேசம் கொள்ளக்கூடிய ஒருவர் தோமஸே என உணர்ந்து, தோமஸிடம்  திரும்பிவந்து மீண்டும் செக்கிலிருந்து வேறு நாட்டுக்குப்போய்விடுவோம் என்கின்றார். எனினும் இவர்களிலிருவரின் கடவுச்சீட்டுக்களும் ரஷ்ய அதிகாரிகளால் பறிக்கப்பட்டதால் அவர்களால் வேறு நாட்டுக்குத் தப்பியோட முடியாது போக, ஒரு கிராமப்புறத்திற்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்து விவசாய வாழ்வு செய்து தமக்கான சந்தோசத்தை கண்டெடுக்கின்ற இவ்விணை, முடிவில் ஒரு ட்ரக் விபத்தில் இறந்துபோவதுடன் நாவல் முடிவடைந்து விடுகின்றது.

மிலான் குந்தராவின் இந்நாவல் இருத்தலியத்தையும், குடும்ப அமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்களை இலகுவில் ஈர்த்துவிடக்கூடிய தோமஸ் ஏன் திருமணத்துக்குச் சம்மதித்தான் என்று வாசிப்பவர்கள் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எவ்வாறு ஒருவன்/ஒருத்தியின் இருப்பு இருந்தாலும் (ஃபிரைடாவும் இங்கே நினைவுக்கு வருகின்றார்) அவர்கள் நம்பிக்கை கொள்கின்ற/சரணாகதி அடைகின்ற ஒரு இடம் இருக்கத்தான் செய்கின்றது. அதேயேதான் தோமஸ் தெரேஸாவிடம் தேடியிருக்கின்றான் போலும்.

 

Ignorance

மிலான் குந்தேராவின் ‘அறியாமை’ (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌இருக்கிறது.

இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை, இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்றார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.

அவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். ‘நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா?’ என அவள் கேட்கின்றாள்.

இரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.

இருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.

இறுதியில் இரினாவுக்கும், யோசப்பிற்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெரிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.

தாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப், தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.

குஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனோடு தன் உடலைக் பகிர்ந்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

மீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலான் குந்தேரா ‘அறியாமை’யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.

கடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்?

 

The festival of insignificance

இதுவே குந்தேரா எழுதிய இறுதியாக (2014) வெளிவந்த நாவலாகும். இந்த நாவல் தொடங்குமிடம் மிகவும் சுவாரசியமானது. தெருவில் நடந்துபோகும் பெண்ணின் தொப்புளைப் பார்த்து அதிலிருந்து ஆராய்ச்சி தொடங்குகின்றது. பெண்ணின் மார்பை, பிருஷ்டத்தை, தொடையை, தொப்புளை இவற்றில் எதை ஒருவன் முதலில் பார்க்கப் பிரியப்படுகின்றானோ, அவனின் காமம் எப்படியென அலசி ஆராயப்படுகின்றது. பின்னர் நாவலின் இடையில் தேவதைகளுக்கு தொப்புள் இல்லையெனச் சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு தேவதையே ஏவாள் எனவும் அவளுக்கு ஒருபோதும் தொப்புளே இருந்திருக்காது என ஒரு உரையாடலில் வரும். எனெனில் அவள் எவரினதும் தொடர்ச்சியில்லை. நேரடியாக ‘ஆக்குபவரினால்’ உருவாக்கப்பட்டவள். ஆனால் ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லோருமே தொப்புள்(கொடி) என்ற இணைப்பின் மூலம் காலங்காலமாய் தொடர்புபட்டிருக்கின்றோம். ஆகவேதான் எம்மால் எந்த வரலாற்றின் நினைவுகளிலிருந்தும் எளிதாய்த் தப்பிவிடமுடிவதில்லை என மிலான் குந்தேரா எழுதிச் செல்வார்.

எனினும் மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. ‘The Festival of Insignificance’ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலான் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலான் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் ‘Memories of My Melancholy Whores’ எழுதியதுபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.

 

 

Laughable Loves

குந்தேராவின் ஆங்கிலத்தில் இதுவரை வெளிவந்த ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் குந்தேரா செக்கில் 1958-1968இல் இருந்தபோது எழுதிய கதைகளாகும். அவர் ஒருபோதும் செக் என்று எழுதுவதில்லை, பொஹிமியா என்றேதான் தனது தாய்நாட்டைக் குறிப்பிடுகின்றார். கதைகளிலும் அப்படியே பொஹிமியா என்றே அடையாளப்படுத்தவும் செய்கின்றார்.

இந்தப் புத்தகத்திலும் ஆண்-பெண் உறவுகளே ஆழமாகப் பேசப்படுகின்றன. மனித உறவுகள் என்பது இருத்தலியத்தின் நீட்சியே என்பதை கவனப்படுத்தும் குந்தேரா அதை ஒவ்வொரு கதைகளிலும் காதலினதும்/காமத்தினூடும் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இந்தக் கதைகளில் வரும் காதல்/காமம் எல்லாமே இறுதியில் அபத்தங்களை நோக்கி நகர்வதையும் நாம் காணமுடியும்.

இத்தொகுப்பில் இருக்கும் ‘எட்வேர்டும் கடவுளும்’ மிகச்சிறப்பான கதையெனச் சொல்வேன். கம்யூனிசத்தை, கடவுள் விருப்பை, காதலின் அபத்ததை, மனித வேட்கையை இதைவிட எள்ளலாகவும் தீவிரமாகவும் குந்தேரா இன்னொரு கதையில் சொல்லிருப்பாரா எனத் தெரியவில்லை. எட்வேர்ட் என்கின்ற இளம் ஆசிரியருக்கு, கடவுளை நம்பும் அலிஸின் மீதும் காதல் வருகின்றது. காதலை வளர்த்தாலும், மிகத் தீவிரமாக யேசுவை நம்பும் அலிஸ் காமம் நோக்கி எட்வேர்ட்டை நகர அனுமதிப்பதில்லை. திருமணத்துக்கு முன்னரான உடலுறவை எங்கள் மதம் அனுமதிப்பதில்லை என்பது அலிஸின் வாதம். அலிஸுக்காகவே கடவுள் நம்பிக்கை இல்லாத எட்வேர்ட் தேவாலயத்துக்கும் செல்லத் தொடங்குகின்றார். அவ்வாறு அலிலின் நம்பிக்கையை பெறும் நோக்கில் தனது கடவுள் நம்பிக்கையை பொதுவெளியில் காட்டும்போது அவர் கற்பிக்கும் பாடசாலையினால் கண்டிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பாடசாலையில் கற்பிக்கும் ஒருவர் தனது மதநம்பிக்கையை பொதுவெளியில் காட்டக்கூடாதென்பது அங்கே வழக்கிலிருக்கிறது. இப்போது எட்வேர்ட்டுக்கு அவரது ஆசிரிய தொழிலே பறிபோய்விடும் ஆபத்து வருகின்றது.

அவரை விசாரிக்கும் குழுவில் இருக்கும் பெண்ணாலேயே, அதற்கு முன்னர் எட்வேர்ட்டின் தமையனின் வளாக வாழ்வே இல்லாமற் செய்யப்பட்டதால், எட்வேர்டின் தமையன் இதுகுறித்து எச்சரிக்கை செய்தே எட்வேர்டை அனுப்பியிருந்தார். என்றாலும் ‘விதி’ எட்வேர்டின் வாழ்விலும் மீண்டும் விளையாடுகின்றது. எட்வேர்டின் தமையன், படிக்கும் காலத்தில் ஸ்டாலின் இறந்துபோனது அந்தச் செய்தி தெரியாது, நன்கு தூங்கு எழுந்து அடுத்த நாள் கம்பஸுக்குப் போனபோது – இப்போது எட்வேர்டை விசாரிக்கும் பெண்- ஒரு துயரச்சிலை போல நடுவளாகத்தில் காட்சியளித்தபடி நிற்கின்றார். எட்வேர்டின் தமையனுக்கு, ஸ்டாலினின் இறப்பின் விபரந்தெரியாது, ஆகவே அந்தத் ‘துயரச்சிலையை’ மூன்றுமுறை சுற்றி, எள்ளல் செய்து சிரிக்கின்றார். கம்பஸ் வளாகமோ இவர் வேண்டுமென்றே ஸ்டாலினுக்கு எதிராகக் கலகம் செய்கின்றார் என்று நினைக்கின்றது. இதன் காரணமாக அன்று எட்வேர்டின் மூத்த சகோதரர் கம்பஸில் இருந்து விலத்தப்படுகின்றார்.

இப்போது எட்வேர்டின் கடவுள் நம்பிக்கையை விசாரிப்பவரும் அதே பெண்தான். எட்வேர்ட் ‘உண்மையில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அலிஸிற்காகவே இப்படி தேவாலயத்துக்குப் போகின்றேன்’ என்பதை மறைத்து, தனக்குள் எங்கிருந்தோ கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று ஓர் அப்பாவித்தனமான நாடகத்தை விசாரணைக்குழுவின் முன் ஆடத்தொடங்குகின்றார். விசாரணைக் குழு அதை உண்மையென நம்பி, இவரை ‘நல்மனிதனாக்கும்’ முயற்சியை இப்போது நிர்வாகியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்படுகின்றது.

இவ்வாறாக அந்தச் சந்திப்புக்கள் நீண்டு அந்தப் பெண் நிர்வாகி இவரை தனது ஸ்டூடியோ அடுக்ககத்திற்கு அழைத்துப் பேச, அது உடலுறவுக்குச் செல்கின்றமாதிரியும் ஆகிவிடுகின்றது. கடவுள் நம்பிக்கையை இல்லாமல் செய்ய, எட்வேர்டை அழைக்கும் அந்தப் பெண்ணை, காமத்தின் நிமித்தம் முழந்தாழிட்டு கடவுளின் பெயரால் என்று பிரார்த்தனையும் செய்ய எட்வேர்ட் வைக்கின்றார். அதை மிக நளினமாக, மிகச் சிறந்த எள்ளலாக குந்தேரா எழுதிச் செல்கின்றார்.

இதுவரை தனது காதலை/காமத்தை மறுத்துவந்த அலிஸிக்கு எட்வேர்ட் ஒரு மதநம்பிக்கைக்காகப் போராடும் ஒரு போராளி போலக் காட்சியளிக்கத் தொடங்குகின்றார். மற்ற எல்லோரும் அமைதியாக இருக்க, எட்வேர்டே தனது கடவுள் நம்பிக்கைக்காய் தனது தொழிலைக் கூடத் துறக்கத் தயாரானவர் என்று அலிஸிற்கு எட்வேர்ட்டில் மதிப்புக் கூடுகின்றது. எட்வேர்ட்டுக்குத் தன்னை முழுதாகக் கொடுக்க அலிஸ் சம்மதிக்க, கிராமப்புற பண்ணை வீடொன்று எட்வேர்ட் அழைக்கப் போகின்றார். அதுவரை உடல் சார்ந்து காமத்தைப் பெருக்கி பெரும் ஆனந்ததைக் கொடுத்துக் கொண்டிருந்த அலிஸ் தன்னைக் கொடுத்த அந்த இரவின் பின் எட்வேர்ட்டுக்கு ஒரு சாதாரண பெண்ணைப் போல ஆகிவிடுகின்றார். அந்தப் பயணம் முடியும் தருவாயிலேயே, அலிஸ் நீ இப்போது ஒரு உண்மையான கடவுள் நம்பிக்கையான பெண் இல்லை. உன்னை எனக்குத் தந்ததால் நீ உன் மதத்துக்கு துரோகம் செய்துவிட்டாய், இதுவரை நான் உன் மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியாக்கிவிட்டாய்’ என்று கோபித்து அலிஸோடு உறவை அத்தோடு  முறித்துவிடுகின்றார்.

ஆனால் எட்வேர்டை விட வயது முதிர்ந்த பெண் நிர்வாகியோடு உடல்சார்ந்த உறவு, அலிஸின் உறவைத்துறந்த பின்னரும் எட்வேர்ட்டுக்கு நீள்கின்றது. இப்போது எட்வேர்ட் அலிஸையும், பெண் நிர்வாகியையும் தனது வாழ்வினுள்  கடந்து வந்துவிட்டார். அவருக்கு இதற்குப் பின் பல பெண்களின் உறவுகளும் வாய்த்துவிட்டன. தனித்து இருந்தால் இவற்றை நன்கு அனுபவிக்க முடியும் என்பதையும் கற்றுணர்ந்துவிட்டார். இந்தக் கதையை முடிக்கும்போதுதான் குந்தேராவின் கதையெழுதும் நுட்பம் தெரியும்.

இப்போது எட்வேர்ட் அவ்வப்போது தேவாலயத்துக்குச் செல்கின்றார். ஆனால் அதை வாசிப்பவராகிய நாங்கள் உண்மையிலே எட்வேர்ட்டுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதென்று நம்பவேண்டாம். அவருக்கு கடவுள் இல்லை என்பது நன்கு தெரியும். ஆனால் அவருக்கு கடவுள் என்ற கருத்திற்கான ஏக்கம் இருப்பதால் மட்டுமே தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றார் என்று நமக்குச் சொல்கின்றார் குந்தேரா. எப்போதும் எதையும் தொலைத்ததுபோல இருக்கும் எட்வேர்ட் ஒருநாள் தேவாலயத்தில் கப்போலாவை கனவோடு பார்த்தபோது, கடவுள் ஒருநாள் சூரியஒளியில் எட்வேர்ட்டுக்கு தரிசனம் கொடுத்தார். அப்போது மட்டும் எட்வேர்ட் நன்கு சிரித்தார். ஆகவே இந்தக் கதையை வாசிக்கும் நீங்களும் தயவுசெய்து அந்த சிரித்த முகத்து எட்வேர்ட்டை உங்கள் நினைவுகளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மிலேன் குந்தேரா இந்தக் கதையை முடிக்கிறார்.

இவ்வாறு இந்தத் தொகுப்பு முழுதும் எள்ளலும், அபத்தமானதுமான காதல் கதைகள் சொல்லப்படுகின்றன. சில கதைகளில் வயது முதிர்ந்த பெண்களோடு இளம் ஆண்களுக்கு வரும் காதல்கள், அவர்கள் அதுவரை வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைத்துப் பார்க்கும் காம நிகழ்வுகள் என பல பாத்திரங்களை குந்தேரா இங்கே நமக்குத் தருகின்றார். இந்தக் கதைகளின் பலமும் பலவீனமும் என்னவென்றால் ஆண்களே முக்கிய பாத்திரங்களாகின்றனர். பெண்கள் இரண்டாம் கதாபாத்திரங்களாகின்றனர். அத்தோடு அவர்கள் பெரிதாக தங்கள் குரல்களில் பேசுவதில்லை. பேசினாலும், அதை மிஞ்சி குந்தேராவின் ஆண் பாத்திரங்கள் எள்ளலாக எதையாவது சொல்லி தம்மை நிரூபிக்க முயல்கின்றன. இந்தக் காரணங்களினால் இன்றைக்கு (இவை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்) குந்தேராவின் பெண் பாத்திரப்படைப்புக்கள் கேள்விக்குட்படுத்தப்படலாம். பெண் பாத்திரங்கள் பெரிதும் காதல்/காமம் சார்ந்து வருகின்றனவே தவிர, அவை ஒருபோதும் ஆணைச் சாராது தனித்து நிற்கும் உறுதியான பாத்திரங்களாய்க் காட்டப்படுவதில்லை. குந்தேராவின் பெண்கள் தனித்து வாழ்ந்தாலும், கணவனை இழந்து வாழ்ந்தாலும், ஏன் கணவனோடு சேர்ந்து வாழ்ந்தாலும் ஆணின் பார்வையினூடாகவே வாசிக்கும் நமக்குக் கடத்தப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே வேண்டியிருக்கின்றது. இதனால் குந்தேராவின் கதைகள் வீரியமிழக்கின்றன என்பதைச் சொல்லவரவில்லை, ஆனால் இவற்றையும் நினைவில் வைத்தே குந்தேராவின் படைப்புக்களை நாம் வாசிக்கவேண்டுமென கவனப்படுத்த விரும்புகின்றேன்.

 

3.

மிலான் குந்தேராவின் நாவல்களில் ‘The  Book of Laughter and Forgetting’, ‘The Unbearable Lightness of Being’, ‘The Joke’ என்பவை பிரசித்தமானவை. ஆனால் என் தனிப்பட்ட விருப்புக்களாக இவற்றோடு ‘Ignorance’, ‘Identity’ என்பவற்றைச் சேர்த்துச் சொல்வேன். ஆண்-பெண் உறவுகளின் சுவாரசியம்/அபத்தங்கள், நாடுவிட்டுப் பிரிந்த துயரங்கள், இழப்புக்களை எள்ளல்களோடு தாண்டும் இலாவகம்,  அரசியல் ஆக்கிரமிப்புக்களை எந்தப் பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர்மை, ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் சிக்கிக்கிடக்கும் மனித மனங்கள் என்று கலவையாக, அதேசமயம் உளவியல்/தத்துவார்த்த விடயங்களோடு தொடர்புபடுத்தி சுவாரசியமாக மிலான் குந்தேராவை விட இன்னொருவரால்  சமகாலத்தில் எழுதிவிட முடியமுடியுமா எனத் தெரியவில்லை. அதேவேளை செக் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு (1989இல்) முடிந்தபின், அதுவரை இருந்த ரஷ்ய-அமெரிக்க இருதுருவ நிலை அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, மிலான் குந்தேராவை 70/80களில் தூக்கிவிட்டுக் கொண்டாடிய மேற்குலகு பின்னர் கைவிட்டதும் நிகழ்ந்திருக்கின்றது. மேலும், குந்தேரா செக் மொழியைக் கைவிட்டு பிரெஞ்சில் எழுதத் தொடங்கியபின், அவரது படைப்புக்கள் முன்னர்போல கொண்டாடப்படும் நாவல்களாக மாறிவிடாத துயரமும் நிகழ்ந்திருக்கின்றது. இன்றைக்கு #MeToo movement எழுச்சி பெற்றுவரும் வேளையில், குந்தேராவின் பெண் பாத்திரங்கள் மீது கடும் விமர்சனங்களும் சிலரால் முன் வைக்கப்படுகின்றன. ஒருவகையில் அன்றைய ‘அரசியல் சரி/நிலை’யைப் பற்றி அக்கறைப்படாது எழுதிய எல்லா எழுத்தாளர்களும் இவ்வாறான கேள்விகளை நிகழ்காலத்தில் சந்திக்கவேண்டியவராகவே இருக்கின்றனர். அந்தவகையில் குந்தேராவும் விதிவிலக்கானவர் அல்ல.

இன்று குந்தேராவின் நாவல்களில் முக்கிய தொனியாக இருந்த ரஷ்ய ஆக்கிரமிப்பு இல்லாது போனபின், அவரது நாவல்களுக்கு இன்று என்ன முக்கியத்துவம் என்ற கேள்விகளும் இருக்கின்றன. அதை ஒருகாலத்தின் வரலாறு என எடுத்துக் கொள்ளலாமே தவிர, இன்றைய தலைமுறைக்கு அந்த ஆக்கிரமிப்பு/துயரம் என்னவாக ஆகப்போகின்றது என்பதும் முக்கிய வினாவாகும். ஆனால் குந்தேரா தன் நாவல்களினூடாக இதைமட்டும் எழுதியவரல்ல. அவர் மனித இருப்புக்கள் குறித்தும், ஆண்-பெண் உறவுகள் குறித்தும், நிலைகொள்ளா மனங்களின் விசித்திரமான மாறுதல்கள் பற்றியும் ஆழ்ந்து பார்த்தவர் என்பதால் இந்த எல்லா வகையான விமர்சனங்களையும் தாண்டி மிலான் குந்தேரா இன்னும் நெடுங்காலம் மறக்கப்படாமல் இருப்பார் போலவே தோன்றுகின்றது. இருத்தலியத்தை பிரான்ஸிலிருந்து காப்ஃகா, சார்த்தர், காம்யூ போன்றோர் ஒருகாலத்தில் தமது படைப்புக்களினூடாகத் தீவிரமாக உரையாடிவர்களென எடுத்துக்கொண்டால், சமகாலத்தில் இருத்தலியத்தின் அழகையும் அபத்தத்தையும் பேசுகின்றவர்களாக நான் ஹருகி முரகாமியையும், மிலான் குந்தேராவையும் சொல்வேன்.

 

‘ஓர் எழுத்தாளராக இருப்பது என்பது உண்மை என்னவென்று பிரசங்கம் செய்வதல்ல, எது உண்மை என்பதைத் தேடிப் பார்ப்பதாகும்’ என்று கூறும் குந்தேரா, ‘ஒர் இலக்கியப் படைப்பானது, மனித இருப்பின் அறியப்படாத பகுதியை வெளிக்காட்டி, வாழ்தலுக்கான ஒரு அர்த்தத்தைக் கொடுப்பதாகும்’ எனவும் சொல்கின்றார்.

இந்த மனித இருப்பின் ‘அறியப்படாத பகுதிகளின் ஆழங்களுக்கு’ நம்மை தனது படைப்புக்களினூடாக அழைத்துச் சென்று பார்க்கவும், பதட்டப்படுத்தவும், பரவசப்படுத்தவும்  செய்தவர் மிலான் குந்தேரா என்பதில் வாசகர்களாகிய நமக்கு எந்தச் சந்தேகமும் ஒருபோதும் வரப்போவதில்லை.

***

இளங்கோ

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *