கடல் வெள்ளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும், பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது நீலம். நீலம் பொறுமையின் சின்னம். ஏன் எனக்கும் கடல் அள்ளித்தான் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. உள்ளே போனால் பிணம், வெளியேவந்தால் பணம். இதுதான் எனக்கு கடல் சொன்ன மந்திரம். இந்தக் கடலில்தான் என்னையும், இன்னொருவனையும் ஓசன்பேட்சுமந்து கொண்டு ஆடி ஆடி சென்று கொண்டிருக்கின்றது.

இன்னும் ஐநூறு மீற்றர் போனதும், படகு நிறுத்தப்படும். எனதுவயிற்றில் 16 இறாத்தல் இரும்பும், முதுகில் இருசிலிண்டர்களும் கட்டப்படும். முகத்திற்கு மூடியும், வாய்க்கு குழாயும், காலுக்குத் துடுப்பும், கத்தியும், பிஸ்டலும், இடுப்பிலுள்ள சிறு வளையத்திற்கூடாக நைலோன் கயிறும் மாட்டப்பட்டு முதுகுப்பக்கமாக நீருக்குள் விழுந்து, மூச்சை அடக்கி, கடலடிக்குப் போய், கூடக்கொண்டு போகும் உரப்பைக்குள் கடல் அட்டையை நிரப்பிக் கட்டினால் பைதானாக மேலே வரும். அதை படகிலிருப்பவன் சேகரித்துப் படகுக்குள் போடுவான். ஏதாவது ஆபத்து என்றால் இடுப்புவளையத்திலுள்ள கயிற்றை நான்கு, ஐந்து தடவை விரைவாக அசைக்க படகிலிருப்பவன் ஆபத்தென்று உணர்ந்து கயிற்றைவேகமாக மேலே தூக்கி என்னை ஆபத்திலிருந்து மீட்பான். கறுப்பு அட்டையை படகுச் சொந்தக்கார முதலாளிக்கு ஒருவிலைக்கு விற்க, அவன் அதனுடன் இருபது முப்பது ரூபாய்வைத்து வேறு வியாபாரிகளுக்கு விற்பான். வெள்ளை அட்டை என்றால் எங்களுக்கு சந்தோசம். நூற்றுக்கணக்கில் விலைபோகும். எப்படியோ கூட்டிக் கழித்துப்பார்த்தாலும் மாதம் பதினைந்தாயிரத்திற்கு மேல் மிஞ்சும். உள்ளே போனால் பிணம். வெளியே வந்தால் பணம் என்பது உண்மைதான். கடல் என்னும் வள்ளல்கார அம்மா பொறுமைக்காரர்களுக்கும் வீரர்களுக்கும் தான் அள்ளிக்கொடுப்பது வழக்கம். கடல் அன்னை வீரத்தின் உறைவிடம். எவ்வளவோ வீரக் கதைகளை தன் நெஞ்சிலே புதைத்து வைத்திருக்கிறாள்.

இப்போதுஓசன்பேட்குறித்த இடத்தை அடைந்துவிட்டது. எனது பத்தாவது வயதில் பராக்கிரம சமுத்திரத்தின் வலதுகரையின் நீர் பெருக்கெடுக்கும் அணைக்கட்டில் உயரத்தில் நான் புதினம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பக்கத்துக் கடையில் வேலை செய்யும் காமினி என்னை நீருக்குள் தள்ளிவிட்டான். நீருக்குள் போன நான் மேலுக்கு வராத போதுதான் எனக்கு நீச்சல் தெரியாது என்பதை தெரிந்து, பாய்ந்து என்னைமீட்டு, அன்றிலிருந்து நீச்சல் ஆசானானான். பின்பக்கம், முன்பக்கம் நீந்துவது, சுழியோடுவது, நீருக்குள் எறிகிற கற்களை பொறுக்கி வருவது என்று நிறையவற்றைக் கற்றுத்தந்தான். பதினெட்டு வயதில் ஊர் திரும்பியபோது என் அட்டைபிடிக்கும் நண்பனொருவன் இடுப்பில் இரும்பைக் கட்டி கடலுக்குள் கொண்டு போனான். எனது கடற் தாயின் அழகைக்கண்டு வியந்து போனேன். அவன் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தான். முதல் நாளே நான் எனது முகத்தையும், கண்ணாடியையும் தாக்க வந்த சுறாவை பிஸ்டலால் சுட்டுக்கொன்றேன். தாயின் சேலையில் சிவப்புக் கறை.

அப்போதுதான் இந்த தொழில் எவ்வளவு அபாயம் என்பது புரிந்தது. அமிழ்வதும், மேலே வருவதும் உடனே செய்யமுடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆழத்திலும் குறிப்பிட்டநேரத்தைக் கடத்திவிட்டுத்தான் மேலேயோ அல்லது கீழேயோவரலாம். இப்படித்தான் புறாமலைக்கு அருகில் அட்டை பிடித்துக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு பென்ட் (நைட்ரஜன்நார்க்கோசிஸ்) வந்து கை கால் மடக்க முடியாமற்போய் நீருக்குள்ளே இறந்து போனார்கள். அவர்களின் உடலை நீரோட்டம் அடித்துச்சென்றுவிட்டது. ஒரு முறை கிழக்குப்பகுதியைச் சேர்ந்த இருவர் கூட அதே பகுதியில் சிலிண்டர் அடைபட்டு செத்துப் போனார்கள். அவர்களின் உடல்களுக்கும்இதுதான் நடந்தது.

ஓசன்பேட்டிலிருந்து நங்கூரத்தை எறிந்துவிட்டு கடலைப்பார்க்கிறேன். கடல் அமைதியாகவிருந்தது. இந்தப்பெண்தானா சீறி எழுந்து உயிர்களை துவம்சம் செய்கிறாள். நம்பமுடியவில்லை. அமைதியில்தான் ஆழமும் இருக்கின்றது. அபாயமும் இருக்கின்றது. படகுகூட ஒரு பக்கம் இழுபடுவதுமாதிரி எனக்கு தோன்றுகின்றது. இது நீரோட்டத்தினாலோஅல்லது பிரமையினாலோ என்னவோ. ஆனால் கடல் அன்னைக்கு வீரனைத்தான் பிடிக்கும். ஆனால் என் மனைவிக்கோ இந்த தொழில் பிடிக்கவில்லை. என் எட்டு வயதுமகளுக்கும், என் ஆறு மாத ஆண் பிள்ளைக்கும் நினைவு தெரிந்தால் பிடித்திருக்காமல்தான் இருந்திருக்கும்.

காலில் துடுப்பை மாட்டி, ஒக்சிசன் சிலிண்டர் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் கட்டி முகத்திற்கும், மூக்கிற்கும் கண்ணாடி மாட்டிவிட்டேன். இன்னும் சுவாசக் குழாயை வாய்க்குள் திணிப்பதும், முதுகுப் பக்கமாக கடலில் விழுந்து மூழ்குவதும்தான் பாக்கியிருக்கின்றது. இரவு நடந்ததை நினைத்து கொள்கின்றேன். இந்த கடலட்டைகளுக்காக கடலில் மூழ்குவதை விட்டுவிடுவது சம்பந்தமான எனது மனைவியின் வழமையான நச்சரிப்பு ஞாபகம் வருகின்றது. பிள்ளைகளை வளர்க்க, பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுக்க அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தைப்பெற்றுக்கொடுக்க பணம் தேவை. அது இந்த தொழிலில்தான் கிடைக்கின்றது. இதைவிட்டு உடனே செய்யக்கூடிய வகையில் வேறு தொழிலும் தெரியாது. பிள்ளைகள் வளர்ந்த பின் விட்டுவிடுவேன் என்றுதான் சொல்லுவது வழக்கம். அவளும் வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொள்வாள். கடந்த இரவும் இதுதான் நடந்தது. எனது எட்டு வயது மகள் கட்டிலிலே படுத்துக்கிடந்தாள். எனது ஆறு மாத மகனும் அவளுக்கருகில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனின் கழுத்தைப்பார்க்கிறேன். அவனின் கழுத்து வெறுமையாக இருந்தது. புதிய ஒக்சிசன் சிலிண்டர் வாங்க அதை ஈடுவைக்கவேண்டிஏற்பட்டது. அந்த மாலையை எப்படியோ மீட்டு மீண்டும் அவனுக்கு போட வேண்டும். மகளும் அடிக்கடி சிவத்த கலர்சைக்கிள் வாங்கிக் கேட்கிறாள். அவளுக்கும் எப்படியோஅந்தச் சைக்கிளை வாங்கிக்  கொடுக்க வேண்டும். ஓசன்பேட் அலையில் ஆட சிந்தனை கலைய வாய்க்குள் குழாயைத் திணித்து கடலில் மூழ்கிவிடுகின்றேன்.

கீழே போகின்றேன். போகப் போக திடிரென கணப்பொழுதில் நீரின் வெப்பநிலை மாறுகின்றது. ஏதோ விபரீதம் நிகழப்போகின்றது என்பதை உணருவதற்கிடையில் இன்னும்கீழே எனது சக்திக்கு மீறி சென்றுவிட்டேன். நீரோட்டத்தில் மாட்டிக்கொண்டதை உணர்கின்றேன். மேலே வர முயற்சிசெய்கிறேன் முடியவில்லை. வழமையாக நீரோட்டத்தில் மாட்டிக் கொண்டால் நீரோட்டத்துடன் சென்று ஒரு நிலையில் நீரோட்டத்தின் வேகம் பூரணமாக குறைந்தவுடன் அதிலிருந்துநாம் விடுபட்டுக்கொள்ளலாம். கையை காலை ஆட்டாமல் நானும் நீரோட்டத்துடன் செல்கின்றேன். நீரோட்டம் என்னை அடித்துக்கொண்டே செல்கின்றது. மலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நீரோட்டம் மலையில் மோதி நீரோட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. நான் கைகளை தலைக்கு முன்னால் நீட்டி மலைகளில் முட்டாதவாறு என்னைப்பாதுகாக்கின்றேன்.

ஒருவேளை இதுதான் என் கடைசி நேரம் என்னவோ? எவ்வளவுநேரத்திற்கு இந்த நீரோட்டம் அடித்துச் செல்லும்,? எப்போதுவிடும்? இரண்டு சிலிண்டர் ஒட்சிசன் முடிந்தால் என் நிலை என்ன? என்றெல்லாம் சிந்திக்கிறேன். ஒரு வேளை என் கதைமுடியப் போகின்றதோ என்று நினைக்கின்றேன்மனைவியையும், மகளையும், மகனையும் நினைக்கின்றேன். அந்த மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்திருந்த சைக்கிளினதும், மகனின் சங்கிலியும் ஞாபகம் வருகின்றது. என் மனைவிக்கோ நான் வேண்டும். இதற்காகவேனும் நான் உயிர்பிழைக்க வேண்டும். கடவுளே என்னை உயிர் தப்ப வை என்று வேண்டிக் கொள்கின்றேன். நீரோட்டத்தின் வேகம் குறைவதாக உணர்ந்தேன். எனக்கு உள்ளுர சந்தோசம் வருகின்றது. கடவுளே உனக்கு எனது நன்றிகள். நீ பெரியவன். இப்போது நீரோட்டத்தின் வேகம் அதிலிருந்து நான் நீங்கிமேலே வருவதற்குப் போதுமான அளவு குறைந்துவிட்டது. இப்போதும் மனைவியும், மகளும், மகனும், அந்தச் சிவத்த நிற சின்ன சைக்கிளும், மாலையும் ஞாபகத்திற்கு வருகின்றன. நீர் மட்டத்திற்கு வந்து விட்டேன். மீண்டும் இப்போதுதான்உயிர் பிறந்தது. ஒக்சிசன் சிலிண்டர்கள், துடுப்பு, இரும்பு எல்லாவற்றையும் உடம்பிலிருந்து கழற்றிவிட்டேன்.

மணிக்கட்டைப் பார்க்கின்றேன். இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இழுத்துச் செல்லப்பட்டிருப்பதை உணர்கிறேன். சூரியனை வைத்து கரையைத் தேடுகின்றேன். அலைகள்கரையை மறைக்கின்றன. கரை கறுப்புக் கோடடித்த விளிம்புமாதிரி தெரிகின்றது. கரையை நோக்கி நீந்துகின்றேன். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த எனக்கு, களைப்புப்பற்றிய பிரக்ஞை, கரையைக் கண்டதால் உணர்வுரீதியாக அற்றுப் போயிற்று. நீந்துகிறேன். நீந்துகிறேன், கையை காலைஆட்டி, அடித்து நீந்துகின்றேன். மனைவி, மகள், மகன்சைக்கிள், மாலை இவைகளை நினைக்க நினைக்க புதுத்தெம்பு வர நீந்துகின்றேன். இப்போது நீந்த வலது காலை எடுக்கின்றேன். காலை நிமிர்த்தவே முடியவில்லலை. தசைபிடித்துக் கொண்டதை உணர்கின்றேன். பெரிய தசைநார்கள் சின்னத் தசைநார்களுக்குள் வழுக்க முடியாமல் பொறுத்துக்கொண்டது மாதிரி உணர்கின்றேன். நிலத்திலே தசைப் பிடிப்புவந்தால் ஓய்வெடுத்துக்கொண்டு காலை அழுத்திவிடுவதால் தசைப்பிடிப்பிலிருந்து தப்பலாம். ஆனால் நீரில் அப்படிச்செய்ய முடியாது. கால் இயங்காமல் விட்டால் மூழ்கி இறப்பது திண்ணம். பல்லைக் கடித்து அலறிக் கொண்டு, அப்படி அலறுகையில் வாய்க்குள் கடல் நீர் போகிறது. காலை நிமிர்த்துகின்றேன். காலை கத்தியால் அரியும் வேதனையுடன் கால் பழைய நிலைக்கு வருகின்றது. உண்மையாக இந்தக்காலுக்குள் நிறையத் தசைகள் பிய்ந்திருக்கும் போல. இவைமீளப்பெற இரண்டு வாரத்திற்கு மேல் எடுக்கும். அதுவரை வேதனைதான். இப்போது கரையைப் பார்க்கின்றேன். கரைதெளிவாகத் தெரிகின்றது. கரை என்னிலிருந்து எப்படியும் ஒருமைல் இருக்கும்போல் இருக்கின்றது. கரையை இடமிருந்துவலமாக நோக்குகின்றேன். சின்ன சின்னதாக மரங்கள். அவைகள் பனை மரங்களாகத்தான் இருக்கவேண்டும். அதற்கு சற்று அப்பால் வெள்ளையாய் அந்தக் கட்டடம் தெரிகின்றது. அது நிச்சயமாக அந்த ஜேர்மன்காரன் வருசத்தில் ஒரு தடவை தங்குவதற்காக கட்டிய ஜென்னா ஹோட்டல். இப்போது எந்தப்பகுதிக்கு என்னை நீரோட்டம் இழுத்து வந்திருக்கின்றதுஎன்பதை உணர்கின்றறேன். கரைக்கு இன்னும்; அறுநூறுமீற்றர்தான் இருக்கும்போல. உற்சாகத்துடன் கரையை அடைய, மனைவிக்காக, மகளுக்காக, மகனுக்காக, சைக்கிளுக்காக, மாலைக்காக நீந்திக் கரையை அடைகிறேன். மிகவும் களைத்து மயங்கிய நிலை. அலை அடித்து மீண்டும்கடலுக்குள் போகாதிருக்க கொஞ்சம் மணலுக்குள் ஏறவேண்டும். அதற்கு கூட உடம்பில் பலமில்லை. உடம்பு இயங்கமறுக்கிறது. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மணலுக்குள் ஏறி தலையைத் தூக்கிப் பார்க்கி;றேன். முள்ளுக்கம்பி வேலிகளும், மணல் மூடைகளும் கொஞ்ச தூரத்தில்தெரிகின்றன. இந்தக் கடற்கரை எது என்பதை உணர்கையில்மயங்கிப் போகிறேன்.

சூரியனின் கதிர்பட்டு கண்விழித்துப் பார்க்கிறேன். உச்சிவெயில். அந்த முகாம் தெரிகின்றது. இதே சூரியனின்கதிர்தான் அந்த முகாமை முட்கம்பி வேலிகளுக்கூடாகஊடறுத்து, ஜன்னலுக்கூடாகச் சென்று, கட்டிலிலே படுத்துக்கிடந்த ராஜபக்ஸவினதும் பாயிலே படுத்துக் கிடந்த சேவகபக்ஸவினதும் முகத்திலே பட்டு, அவர்களை இன்றுகாலையில் துயிலெழுப்பியது. வழமையான காலைகள் போல் இந்தக் காலையிலும் அவர்கள் தறு|(நட்சத்திரம்)க்களைப்பற்றிச் சிந்தித்தார்கள். ராஜபக்ஸ இரண்டு தறுக்கள். உயர்ந்தஸ்த்தானம். சேவகபக்ஸ ஒரு தறு. கீழ்ஸ்த்தானம். பதவியுயர்வுபெற்று மாற்றலாகி அந்த முகாமிலிருந்து நகரப்பகுதிக்கோ அல்லது தலை நகருக்கோ அல்லது பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ அல்லது அவர்களின் தாயகப் பகுதிக்கோ செல்வதற்கு ஆளுக்கொரு தறுதேவைப்பட்ட நிலையில் தான் இன்று உச்சிவெயில் பகலில் என்னை மயக்கத்திலிருந்து எழுப்பிய சூரியக் கதிர் அவர்கள்இருவரையும் காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பியது.

மயக்கம் தீர்ந்தாலும், பசியும், தாகமும், களைப்பும் என்னைவாட்டியது. நான் அந்த முகாமுக்கு முன்னால் கரையொதுங்கியதை உணர முடிந்தது. மரத்தால விழுந்தவனை மாடு வெட்டுமா? இல்லாவிட்டால் தோணிகவிழ்ந்தவனுக்கு மரக்கட்டையா?. விதி எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரத்தில்நான்கு பேர் வந்தனர். என்னை உடம்பு பூராகத் தடவிவிட்டுமுகாமுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள். மிகுந்தசக்தியை வரவழைத்துக்கொண்டு மிக்க பிரயாசைப்பட்டுதண்ணீர் கேட்டேன். எப்படியோ அதைப் புரிந்து தண்ணீரைவாய்க்குள் ஊற்றினார்கள். இப்போது மனதுக்கு மட்டும் தெம்புவந்தது. உடல் பலவீனமடைந்து இருந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் மனைவியையும் மக்களையும் நினைத்துக்கொண்டு பதில் சொன்னேன்.

இப்போது ராஜபக்ஸவும், சேவகபக்ஸவும் வருகிறார்கள். அந்தநான்கு பேரும் அணிவகுத்து சல்யூட் பண்ணி அவர்களுக்குமரியாதை செய்கிறார்கள். இருவரிடமும் என்னைப் பற்றிச்சொல்கிறார்கள். இருவரும் கேட்டுவிட்டு என்னமோ கதைக்கிறார்கள். அது எனக்கு ஓரளவு தெளிவாக விளங்குகின்றது. அலற வேண்டும் போல் இருக்கின்றது. ஆனால் முடியவில்லை. மனம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவர்களின் காலைப் பிடித்துக் கையெடுத்து கும்பிட்டு யாசிக்க வேண்டும் போல் இருக்கிது. யாசிப்பது இழிவுதான் என்றாலும் என் மனைவிக்காகவும், என் மகளுக்காகவும், என் மகனுக்காகவும், அந்தச் சைக்கிகளுக்காகவும், மாலைக்காகவும் செய்ய நினைக்கறேன். முடியவில்லை. அழுகிறேன். கதறுகிறேன். ஆனால் வெளியே சத்தம் வரவில்லை. என் உடலும்அசையவேயில்லை. பலவீனம் என் உடலை இயங்கச்செய்யவிடவில்லை.

அந்த நான்கு பேரும் என்னை இழுத்துக் கொண்டு என்னைப்பொறுக்கிய இடத்தில் போட்டுவிட்டு வந்தார்கள். இப்போதும்அந்தச் சூரியக்கதிர் என்முகத்தில் படுகிறது. ஆனால் சுடவில்லை. என் கதை முடியப்போகிறது என்பதை உணர்கிறேன். என்னை நோக்கி ராஜபக்ஸவும், சேவகபக்ஸவும்; ஆளுக்கொரு துப்பாக்கியுடன் வருவதைக்காண்கிறேன். என்னை சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்பதை உணர்கிறேன். ஒரு வேளை இருவருக்கும் ஒருமகனும், ஒரு மகளும் இருக்கலாம். சைக்கிளும், மாலையும் வாங்கித் தருவதாக வாக்களித்தும் இருக்கலாம். என் கதையை முடிக்கப் போவதால் அவர்களின் சந்துகளில் ஏறப்போகிறதறுக்கள் அல்லது நட்சத்திரங்கள் அவர்களுக்கு பதவியுயர்வுகளையும், மாற்றல்களையும் கொடுத்து நகரப்பகுதிக்கோ அல்லது தலைநகர்ப் பகுதிக்கோ அல்லது பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ அல்லது அவர்களின் தாயகப் பகுதிக்கோ அனுப்பி வைக்கும். எனது மகளினதும், எனது மகனினதும் வாழ்க்கையையும் சைக்கிளையும்மாலையையும் அழித்து அவர்களின் மகளுக்கும், மகனுக்கும், சைக்கிளும், மாலையும் கொடுக்கப்போகிறார்கள். ஒன்றுபட்டால்உண்டு வாழ்வு என்பது இதுதானாக்கும். சாம்பல்மேட்டில் கட்டிடம் கட்டி அவர்களது மக்களுக்கு கொடுக்கப்போகிறார்களாக்கும்.

இப்போது இருவரும் என்னை நெருங்கிவிட்டார்கள். முதலில் சேவகபக்ஸ துப்பாக்கியை நீட்டி என் வயிற்றிலே சுடுகிறான். ஏதோ திரவமாக மெல்ல மெல்ல உடலிலிருந்து கசிவதை உணர்கிறேன். அதைப் பார்க்கக்கூட எனக்கு திராணி இல்லை. இப்போது ராஜபக்ஸவின் முறை. எனது நெஞ்சிலே மூன்றுமுறை சுடுகிறான். இப்போது என் நெஞ்சிலிருந்தும் திரவம் கசிந்து கொண்டிருக்கின்றது. நான் சாகப் போகிறேன் போல. வேறெங்கோ தேடுதலில் கிடைத்த அல்லது பதிவேட்டில் பதியப்படாத உருண்டையான குண்டோ அல்லது நீளமானதுப்பாக்கியோ அதிசயமாய் தான் தோன்றியாய் எனதருகில் உதிக்க தலை நகருக்கும் மற்றும் உலகமெங்கும் செய்திபறக்கும். உடனே போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ந்து பார்க்காது நாளை காலை குளக்கரை, இனதினவீரவாரகுரல்ஒளி ஏடுகளும், வலுவாஹினிஆதவ ஊடகங்களும் இன்னும் என்னென்னவோ ஏற்கனவே அவர்களின் மண்டைகளுக்குள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பக்குவமாய் அடுக்கி வைக்கப்பட்ட அந்த ஒருசொல்லை வைத்து பலி| என கொட்டை எழுத்துக்களில் போடும். இப்போது எனது வலது கண்ணில் எனது மனைவியும், என் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும், என் ஆறுமாதமகனும், என் இடது கண்ணில் மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்த சைக்கிளும், ஒக்சிசன் சிலிண்டர் வாங்குவதற்காக கடலின் நீலமும் ராஜபக்ஸவினதும், சேவகபகஸவினதும் சந்துகளை அலங்கரிக்கப் போகின்ற அந்த பச்சையும் நீலமும் கலந்த தறுக்கள் மாதிரி மின்னிமின்னி தெரிகின்றபோது என் காலிலிருந்து உயிர்நெஞ்சுக்கூடாக தொண்டைக்குள் வந்து, எனது இறுதிமூச்சோடு கலந்து இரு கண்களுக்கூடாகவும் வெளியேறத்தயாராகி நின்றது.

***

(சரிநிகர் 1999, நவம்பர்டிசம்பர்)

-அம்ரிதா ஏதும்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *