வக்காத்துக் குளம் நாவலின் ஒரு பகுதி

 

பெருநாள் முடிந்த அடுத்த நாள் ஆத்தப்பாவின் செத்தைக் குடிலுக்குள் ‘சீன சர்க்கஸ் கம்பனி’ நடத்தினான். தேங்காய்ச் சிரட்டைகளில் ஓட்டையிட்டு அதனூடாக கயிறு இழுத்து அதன் மீது ஏறி நின்று கொண்டு “டவுக்கு… டவுக்கு” என்று குதித்துக் குதித்து குதிரையாட்டம் காட்டி வியக்க வைத்தான். உயரமான
பலமான தடிகளில் கயிறுகட்டி அவற்றின் மீது ஏறி நின்று கொண்டு பத்தடி உயர மனிதனாக பொய்க்காலில் நடந்து காட்டி
திகைக்க வைத்தான்… அடுத்த காட்சியாக ஒட்டு மீசை தாடியுடன் தொளதொள அங்கியணிந்து ஓரங்க நாடகத்தின் தனிப்பெரும் கதாநாயகனாகி ஒரு நாளும் கேள்விப்பட்டிராத பாடலை எழுதி இசையமைத்து பாடி மயக்கினான்.

“வீறான் வீறான் தோட்டத்திலே
வறுத்துப் போட்டானாம் பள்ளிக் காக்கா
வாசிக்கு கொண்ட வெட்டச் சொல்லி
வாயில போட்டானாம் முல்லக்காரன்…”

இத்யாதி கதை வசனம் பாடல் காட்சிகளால் ‘சர்க்கஸ்’ பார்க்க
சிறுவர் கூட்டம் அம்மியது. எனவே என்னையும் குண்டனையும்
‘டிக்கட்’ கருமபீடம் அமைத்து வசூல் செய்வித்து ஒரே நாளில்
இரண்டு ரூபா முப்பது சதம் சம்பாதித்தான். நிகர இலாபத்தில்
எனக்கும் குண்டனுக்கும் தலா இருபது சதமும் சிறுமிகளுக்கு
தலா ஐந்து சதமும் கொடுத்தான்.

“ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க்…”
கர்ணக் கொடூரமாக ஒலித்த பாடசாலை மணியில் கவனம்
கலைந்தேன்… ஒஹ்… காலக் குதிரைக்கு என்னதான் வேலை…?
மூச்சிரைக்க மூச்சிரைக்கப் பாய்ந்து செல்வதைத் தவிர…? தொழில் தேடல்கள்… பணத் தேவைகள்… சம்பாதிப்புகள்… எல்லாம் சம்பாதித்தாகி விட்டது… அதற்கு விலையாக இளமையை – அமைதியை கொடுத்தாயிற்று…
இனி எங்கு செல்ல…? யோசனையுடன் திரும்பிய போது திடீரென
தலைக்கு மேலால் இள நீல வர்ணத்தில் பறந்து சென்றது ஒரு
பறவை… ஒஹ்… இதென்னா வக்காப் பறவையா… அட… அந்த வக்காத்துக்குளம் இப்பவும் இருக்குமா… இதிலிருந்துதானே இந்த
ஊருக்கும் இந்தப் பெயர் வந்தது… ஆர்வம் உந்தித் தள்ள… கரைவாகு வயல்வெளிகள் இருக்கும் என நான் உத்தேசித்த திசையில் மெதுவாக நடந்தேன்… வக்காத்துக்குளத்தை காண மிக வேட்கைப்பட்டேன்…

***

மூன்றாம் தவணைப் பரீட்சை முடிந்த கையோடு கிடைத்த விடுமுறையில் ஒருநாள் எங்களது கனவுப் பள்ளத்தாக்கான வக்காத்துக்குளத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு சாந்தமாமாவை நாங்கள் பல தடவைகள் வற்புறுத்தியிருந்தோம். நாங்கள் இன்று பின்னேரம் ஆத்தப்பாவின் செத்தைக் குடிலுக்குள் கல்யாண
வீடு சோடனை செய்து மாப்பிள்ளை எடுப்பு பெண்அழைப்பு என்று முழுமூச்சாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென
சாந்தமாமா வந்தான். தனது இறுதி முடிவை அறிவித்தான்.

“டே…ய்… வாங்கடா… இப்ப ஒரு வெசயம் சொல்லயா…?”
“சொல்லு…”
“நாம நாளக்கி வக்காத்துக்குளம் போற… டோவ்…!”
“ஹோ…வ்…”

நாங்கள் மகிழ்ந்து கூச்சலிட்டோம். உள்ளே ‘மணப்பெண்’ அலங்கரித்துக் கொண்டிருந்த சிறுமிகள் ஒடி வந்தனர்.
“சாந்தமாமா… சாந்தமாமா. நீ இப்ப
சொன்ன…? நாங்களுமா…?”
இவனுகளுட்ட என்ன
“வக்காத்துக்குளத்துக்க நாளக்கிப் போற… நீங்களுந்தான்…”
“ஹ…ய்ய…ய்ய்…”

சிறுமிகள் கூச்சலிட நாங்கள் கோபமுற்று,
“ல்ல… சாந்தமாமா… பொண்டுகள் வேணா…” என்று உடன்
மறுதலித்தோம்.

“ஏண்டா…?”
‘ல்ல சாந்தமாமா… நாங்க அவளுஹளோட ‘அத்தம்’ உட்டிருக்கம்.
ஒரு கௌமைக்கிப் பேசற ல்ல…’”
“ச்சே… அத்தம் உட்ட தோசி… நாலுபணக் காசி… கடலுக்க
மாசி…” மாலைவெள்ளி எங்களைப் பழித்தாள். சாந்தமாமா எங்களைச் சமாதானப்படுத்தி… இருபக்கத்
தூதுவனாகி… எங்கள் நிர்வாணத்தை அவர்கள் பார்த்ததை பாடசாலையில் யாருக்கும் சொல்லமாட்டார்கள் என்ற உறுதிமொழி பெற்றுக் கொடுத்த பின்னர்… சிறுமிகளோடு, சின்னிவிரல்
தொட்டு ‘பழம்’ விட்டு இணங்கினோம்.
அடுத்தநாளே எமது பெற்றோருக்குத் தெரியாமல் திட்டம் அமுலாகியது. வக்காத்துக்குளத்துக்குச் செல்ல பட்டிப்பளை ஆற்றைக் கடக்க வேண்டும். எங்களால் தனியாக முடியாது. சாந்தமாமாவால் எங்களைக் கொண்டு சேர்க்க முடியும்.
வக்காத்துக்குளத்துக்கு முன்னர் இரு தடவைகள் களவாகச் சென்று வந்திருக்கிறோம். ஆ… என்ன அழகான இடம்… கண்கள்
நிறையக் கனவுகளுடனும் புது உற்சாகம் கரைபுரண்டோட
சாந்தமாமா தலைமையில் நடந்தோம். கூளம் விதானையின்
தென்னந்தோப்பினூடே ஊடறுத்து நடந்தோம். ஆயிரத்தெண்ணூறு தென்னைமரங்கள்… அடர்ந்த குளிர்நிழல்… குவியல் குவியலாக தேங்காய் உரி மட்டைகள்… தேங்காய்க்
குவியல்கள்… மரத்துக்கு மரம் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

கயிறுகள்… தும்புக் கும்பங்கள்… தொழிலாளர்கள்… கடந்து நடந்தோம்.
தோப்பின் தரையெல்லாம் பச்சைக் கம்பளமாய் புற்கள்…
காட்டாமணை செடிப் புதர்கள்… தொட்டாற்சுருங்கிப் படரிகள்…
பிரப்பம் பற்றைகள்… எரிந்து கரியாய்க் கிளம்பி வரும் நாணல்
இலைகள்… ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதை…
நடு நடுவே நெடிதுயர்ந்த வம்மி மரங்கள்… மர அடிகளில்
இளஞ்சிவப்புப் பந்துகளாய் அதன் பூக்கள்… கடந்ததும்
வரிசையாக பூஞ்சண மரங்கள்… இலையை ஒடித்து சுருட்டி
ஊதினால் ‘பீ…ப்பீ…ப்…’ பென்ற இலவச நாதஸ்வர ஓசை…
அடிமரத்தில் பட்டைபட்டையாக அப்பியிருக்கம் மயிர்க்கொட்டிப்
புளுக்கள்… பார்த்தாலே தலைமயிர் சிலிர்த்தெழும்…

ஒற்றையடிப் பாதையின் குறுக்காக மறித்து கிளைகளை நீட்டிக்
கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்… அதன் ஊதா மஞ்சள்…
சிவப்பு வர்ணங்களில் ஒலிவாங்கிப் பூக்கள்… வழிநெடுக நீலநிற
வண்டுகளின் ‘வ்வ்வ்வ்வெ’ன்ற ஒலியலைகள்…
நெடிதுயர்ந்தும், கிளைகளை அகல விரித்தும் நறுபுளி மரம்…
அதன் சளி நிறைந்த பழம்… இளம்சிவப்புக் கலரில் ஒதக்காய்கள்
விழுத்திக் கவரும் கோமாப் புளிமரம்… சாப்பிட்டால் வாய் நிறைய இனிப்பும் புளிப்புமாக சாறு… சின்னச்சின்ன ஈர்க்குச்சி இலைகளுடன் காட்டீச்சை மரங்கள்… அங்குமிங்குமாய்…
நூற்றுக் கணக்கில் பயணிக்கும் தும்பிகள்… அடர்கிளைகள்
பரப்பிய அலரிமரங்கள்… அவற்றின் சிறிய கூம்புகூம்பான
இலைகளின் அடியில் தங்கக் கலரில் தொங்கும் கூட்டுப்புளுக்கூடுகள்.
பற்றை பற்றையாக நாகதாளி… குறிஞ்சா, மாம்பாஞ்சான்,
கொத்தான வெள்ளைப் பூக்களுடன் சிரிக்கும், நெருஞ்சிமுட்புதர்கள்… எல்லாம் கடந்து நடந்தால்… சரிவாக இறங்கிச்செல்லும் நிலம்… கிடுகிடு பாதாளம்… அப்புறம் சமவெளி.
சாந்தமாமா தலை வகித்து திகில் கதைகள் சொல்லியபடியே
முன்னால் நடக்க நாங்கள் எல்லோரும் தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவரின் சட்டையை அல்லது காற்சட்டையைப்
பிடித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தோம். அப்படியே ரயில் பெட்டிகளாக ஆகி கிடுகிடு சரிவு நிலத்தில் மெதுவாக இறங்கி குச்சுக்குச்சென ஓடினோம்… ரயில்பாட்டைப் பாடியபடியே…
“குச்சுக் குச்சு ரயில் பெட்டி… கூ…வ்வ்வ்” என்று கூவினேன்.

“கூடப் பர்ரா கடப்படி… கூடப் பர்ரா கடப்படி…” என்றான்
சண்முகம்.
“கஞ்சிவடி… கஞ்சிவடி… கூ…வ்வ்வ்வ்…” மாலைவெள்ளி.
“அஞ்சிபிடித் தங்க மாலே… அஞ்சிபிடித் தங்க மாலே…
ஜிக்குப்புக்கு… ஜிக்குப்புக்கு…. ….கூவ்…” பார்வதி.
“திட்டு மண்… திட்டு மண்… திட்டுமண்… திட்டு மண்…” சுபைதா.
“குட்டுமன்… குட்டு மன்… கூ…ஊ…ஊ…ஊ…”
ரயில் சரிவில் இறங்கி சமதரை அடைந்தது. மூச்சிரைத்தது.
நெடு நெடுவெனப் புளியந்தோப்பு… புற்றரையில் சற்று
இளைப்பாறினோம்.
“புளியம்பளம் வேணுமா…?”
என்று கேட்ட சாந்தமாமா ‘படீர்படீரென… காய்ந்த சில
பலமான தடிகளை முறித்தான். அவற்றை முக்கோண வடிவில்
மரநாருரிகளால் இறுகக்கட்டினான். கூடவே பாரத்துக்காகச்
சில கற்களையும் கட்டினான். தூரச் சென்று ஓடிவந்து
தனது விஸித்திர ஆயுதத்தால், புளிய மர உச்சியை இலக்கு
வைத்து வேகமாக எறிந்தான்… சற்று நேரத்தில்… காய்ந்த
புளியம்பழக் குலையொன்று… சுமார் முப்பதடி உயரத்திலிருந்து…
எங்களை நோக்கிச் சிதறி விழுந்தது. ஓடுகள் வெடித்த
அந்தப் புளியம்பழங்கள்… ஆ… புளியினிப்பு… ஆ…!
மாலைவெள்ளியும்… பார்வதியும் மடி நிறையக் கட்டினர்.
“புளி… புளி… என்ன புளி…?” பார்வதி கூவினாள்.

“பளப் புளி…” மாலைவெள்ளி பதில் கூவினாள்.
“என்ன பளம்…?”
“புளியம் பளம்…”

” என்ன புளி..?”.

“பளப் புளி…!”
மறுபடி நடந்து… பட்டடிப்பளை ஆற்றின் மேற்குக் கரையோரம்
வந்துவிட்டோம். இதனைச் சின்னக்குளம் என்பார்கள். தூரத்தே
துரிசி வில் தெரிந்தது. வெகு தூரத்தே சவளக்கடை அரிசி ஆலையின்
புகை உருண்டையாக வானம் நோக்கிப் புகைந்து கொண்டிருந்தது.
சின்னக்குளம் என்பது அகலக்குறுக்கான ஆறு. சிற்றலைகள் பட்டு ‘சௗக்சளக்’கென கரையடிக்கும் நீரலைவுகள்… பக்கத்தே ஆமைப்பாளி… முப்பத்தேழு ஆமைகள் கரையேறி வெயில் காய்ந்தன.
முதலைகளும் இருக்கலாம்… என சாந்தமாமா பயமுறுத்தினான்…
சுற்றிலும்… வண்ணாத்திக் கற்கள்… ஆற்று நீரில் பாம்புபோல நெளிந்தாடும் தென்னை மரப் பிம்பங்கள்… அக்கரைக் கரைவாகு வயல்வெளிகளில் சில கிராமத்தவர்கள்… புல் பிடுங்க
வரிசையிற் குனிந்திருக்கும் பெண்கள்… அவர்களின் கிராமியக்
கவிப் பாட்டோசைகள்… பிடுங்கிய சல்லுக்குள் துடிக்கும் சிறு மீன்களுக்காகக் குறிவைத்துக் காத்திருக்கும்… வரிசைக்கொக்குகள்… சின்னக்குளமும்… சும்மா அல்ல… பத்தடி ஆழம் இருக்கும்… கடக்கப்போகிறோம். சாந்தமாமா தனது… தார்ப்பாய்ச்சியை அவிழ்த்து… தனது அரும்பெரும் ஆயுதங்களை வெளியே எடுத்தான். கண்ணிவலை
தங்கூசுக்கயிறு… ஈயத்துண்டுகள்… ‘சம்பியன்’ சவரஅலகு…
கிளிக்கத்தி… ‘டெல்டா’ டொபிப் பேப்பர்கள்… மண்புளு
நிறைந்த யானைத் தீப்பெட்டி… கய்யான் குண்டு , டியுப் ரப்பர்… கட்டப்பொல்… இரண்டு தூண்டில்கள்… பூட்டூசிகள்… அவ்வளவுதான். நாங்கள் ஆவென்று வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க… ஆயுதங்களை ஒரு பெரிய… சீமெந்துப் பையில்… அடைத்துச் சுருட்டி… என்னிடம் ஒப்படைத்தான். பின் எங்களனைவருக்கும் பொதுவான கட்டளை பிறப்பித்தான்.
“டேய்… ஆத்தக் கடக்கப்போறம்… என்ட முதுகில ஒவ்வொரு ஆக்களா ஏறனும். அக்கரையில உட்டுட்டு வருவன். டே…
சதக்கா… முதல்ல நீ இந்த சாமான்களை நனையாமப் புடிச்சிட்டு,
ஏறு. சம்முவம் நீ நீஞ்சுவாய் தானே… போ… சதக்கா வாடா…”

“ரெண்டாவது நான்” என்றாள் மாலைவெள்ளி.
“ல்ல நான்…”
“நான்டி… நான்டி…”
“பொத்துங்கடா வாய்…! மொதல்ல சதக்கா… பொறகு
ஆராருண்டு பாப்பம். வா… கிட்ட நில்லு… எல்லாரும்…
வட்டமா நில்லு… ம்… செரி…”
என்று எல்லோரையும் வட்டமாக்கிய சாந்தமாமா அவர்களின்
அதிர்ஸ்ட முறைப்படி முதுகிலேறு முறையைத் தீர்மானிக்க
தான் வழக்கமாகப் பயன்படுத்தும் வாய்ப்பாட்டைப் பாடி
ஒவ்வொருவரிடமும் நிறம் கேட்டுத் தீர்மானித்தான்…

“ஓம் பத்து! ஆத்தப்பா சந்தைக்குப் போனாராம்… ரெண்டு
குண்டு வாங்கி வந்தராம்… ஒண்டு காகம் கொண்டு போனதாம்…
மத்தது என்ன நெறம்…?” என்று வசனம் முடிவடைந்த நபரிடம்
கேட்டான் சாந்தமாமா. “சிகப்பு!” என்றாள் மாலைவெள்ளி.
‘சி…வ…ப்…பு…’ என்று சுட்டு விரலால் அனைவரையும்
தொட்டு ‘பு’ என்ற எழுத்தில் முடிந்த நபரை இரண்டாவதாகத்
தேர்வு செய்தான். இப்படி எல்லோருக்கும் முறை தீர்மானித்த
பின்… குளக்கட்டில்… வேகமாக ஓடி… சாறனுக்குள் காற்று
வாங்கி மூட்டையாய்க் கட்டிக் கொண்டு, அப்படியே சற்றும்
பயமின்றி சின்னக்குளத்தினுள் பாய்ந்தான்… சட்டெனத் திரும்பி
நீந்தியபடியே… வந்து

“டே சதக்கா வாடா…” என்றான்.
நான் ஆயுதப்பொதியை தலையில் வைத்துக்கொண்டு …
சாந்தமாமாவின் தோள்களில் ஏறினேன். கூச்சமாகவிருந்தது.
வழுக்கியது… ஆடியது… பயமாக விருந்தது. ஆனால் ஆனந்தமாகவிருந்தது. சாந்தமாமா என்னை காற்று மூட்டையின் மேலுதைப்பு உபயத்தில்… மிக அநாயஸ்யமாக… சுமந்து
சென்றான்… இருபத்தினாலடி அகலத்தை நீந்திக் குறுக்கறுத்து
அக்கரை அடைந்தான்…
“நிண்டுக்க… மத்தாக்கள ஏத்திட்டு வாரன்…”

நான் சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமையோடு
மறுகரையை நோக்கி கூச்சல் செய்தி அனுப்பினேன்.
“கூ…….ய்யா… கூ…ப்பாடோ…….” என் செய்திக்கு சில விநாடி
தாமதத்தின் பின்னர் குண்டன் பதில் கூப்பாடு அனுப்பினான்.
“மெய்யா…மெய்…யா… சாப்…பாடோ…ய்…”
எங்கள் கூச்சலும் பதில் பரிமாற்றமும் தூரத்து மரங்களில் மோதி எதிரொலிகளாக எங்களை நோக்கி மறுபடி மறுபடி ஒலிக்க சண்முகம் தனியாக நீந்திக் கரையேறி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மாலைவெள்ளியைச் சமந்து கொண்டு
சாந்தமாமாவின் கப்பல் வந்தது. மாலைவெள்ளியை இக்கரையில்
விட்டு குண்டனுக்காக மறுபடி சளைக்காது நீந்திச் சென்றான்
சாந்தமாமா… தனிமையைப் பயன்படுத்தி மாலவெள்ளி
என்னிடம்
“டே… சளிவாயா…! ஏன்டா நீ என்ன நக்குத்திண்ணி யெண்டு
ஏசின… நேத்து…?” என்று யுத்தத்தை ஆரம்பித்தாள்.

“அப்ப… நீ ஏண்டி பொருக்கி! என்டயப் பாத்து கறுப்பு எண்டு
சொன்ன….?”
“அதுக்குத்தான் பளம் உட்டுட்டேனடா…”
“போடி பொருக்கி…”
“போடா வள்ளா…”
நான் ஆத்திரமுற்று மாலைவெள்ளியின் மார்பில் கிள்ளிவிட்டேன்…
அவள் என் காற்சட்டையின் கிளிசல் நுனியைப் பிடித்து இழுக்க
தடுமாறிக் கீழே விழுந்தேன்… மறுபடி எழுந்து அவளைப் பிடிக்க
மாலைவெள்ளி தடாலெனக் கீழே விழ அவள் மீது நானும் விழுந்து அவளை எழ முடியாதபடி அவள் மீதே படுத்தேன்… திடீரென ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது… அவளும் என்னை தள்ளி விட முயலாமல் எனக்குக் கீழே படுத்தபடியே என்
முதுகைக் கட்டிப் பிடித்தாள்… என்னமோ ஒரு உணர்வில்
சிறிது நேரம் அப்படியே கிடந்தோம் – அச்சமயம் சண்முகம்
வந்து சேர்ந்தான்…

***

-தீரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *